ஷா ஆலம், மே 6- சிலாங்கூரின் அனைத்து மாவட்டங்களிலும்
நடத்தப்படும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு, மக்கள் மத்தியில்
வலுவான ஒற்றுமையை உருவாக்கி கித்தா சிலாங்கூர் உணர்வுகளுக்கும்
புத்துயிரளிக்கும் என்று மந்திரி புசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பணி நிமித்தப் பயணம் காரணமாக
மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது
உபசரிப்பில் கலந்து கொள்ள முடியாததற்கு தாம் மன்னிப்புக் கேட்டுக்
கொள்வதாக இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளியிட்ட காணொளி
ஒன்றில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அனைத்து சிலாங்கூர் மக்களுக்கும் ஹாரி ராயா அய்டில்பித்ரி
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க பயணம்
மேற்கொண்டுள்ள காரணத்தால் உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கோல
லங்காட்டில் நடைபெறும் பொது உபசரிப்புகளில் கலந்து கொள்ள
இயலாமல் போனதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றார் அவர்.
இந்த பொது உபசரிப்புகள் மூலம் குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும்
கித்தா சிலாங்கூர் உணவுர்களை பரிமளிக்கச் செய்யவும் இயலும் என
நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மே முதல் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை அமெரிக்காவில்
நடைபெறும் 2023 அமெரிக்கா முதலீட்டு உச்ச நிலை மாநாட்டில்
பங்கேற்கும் சிலாங்கூரைச் சேர்ந்த 11 நிறுவனங்களுக்கு மந்திரி புசார்
தலைமையேற்றுள்ளார்.