புத்ரா ஜெயா , மே 6 – மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய குடும்பங்களுக்காக மூன்று உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை ஆண்டுக்கு 2,000 வெள்ளி வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என மித்ரா சிறப்புக் குழுவின் தலைவர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.
இதுதவிர கல்வி அமைச்சில் பதிவு செய்துள்ள தமிழ் பாலர் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4,500 மாணவர்களுக்கு 12 மாதங்களுக்கு தலா 200 வெள்ளி உதவித் தெகை வழங்கப்படும். வேளையில் 150 வெள்ளி பாலர் பள்ளி கல்வி கட்டணமாகவும் 50 வெள்ளி உணவு உதவித் தொகையகாகவும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
மித்ராவின் சமூக திட்டமாக ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் இரத்த சுத்திகரிப்பு மேற்கொண்டுவரும் 900 பேருக்கு உதவித் தொகையாக ஒரு தடவைக்கு 200 வெள்ளி உதவித் தொகை வீதம் மாதத்திற்கு நான்கு முறை வழங்கப்படும் என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரமணன் சொன்னார்.
நிதி உதவிகள் மக்களிடம் முறையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மானியம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் சந்திப்புகளில் உயர் நெறிக் கழக அதிகாரிகளும் ,ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளும் இடம் பெறுவர் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் கூறினார்