கோல சிலாங்கூர் மே 20; தமிழ்ப்பள்ளிக்கு பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம், பள்ளிக்கூடம் என்பது ஓர் கோவில். நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு நாம் எப்படி நற் சிந்தனையை வலுப்பெற பய பக்தியுடன் இறைவனிடம் வேண்டுகிறோமோ. அதுபோல்தான் நம் தமிழ் பள்ளியில் ஒவ்வொரு மாணவர்களும் இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்பினால் மட்டும் போதாது.அவர்கள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்பதை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆசிரியர்களிடம் ஓர் உறவு வைத்து கொள்ள முடியும் என்றார் முனைவர் குமரன் வேலு ராமசாமி.
பிள்ளைகளின் மேம்பாட்டில் பெற்றோர்களின் பங்கு பெரியது. மாணவர்கள் நலனில் பெற்றோர்கள் பங்குடன் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு மிக அவசியமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் கல்வி மிக முக்கியமான ஒன்று என்றார் அவர்.
நம் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கினால் ஒவ்வொரு மாணவனும் கல்வியில் சிறந்து விளங்குவார் என்பதனை நான் இங்கு உறுதியாக கூறுகிறேன் என்று மஸ்துரா அனைத்துலக கல்லூரியின் கல்வி ஆலோசகரும், சொற் பொழிவாளருமான முனைவர் குமரன் வேலு ராமசாமி கோல சிலாங்கூர் வாகீசர் தமிழ் பள்ளியில் பெற்றோர்களுடன் நடத்தப்பட்ட தன்முனைப்பு உரையாடல் ஒன்றில் கூறினார்.
அதே சமயத்தில் இன்றைய காலகட்டத்தில் நம் இந்திய பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவது, நம் தமிழுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும், பள்ளிக்கூடம் என்பது கோவில் மாதிரி, கோவிலுக்கு சென்றால் நாம் மதுபானம் அருந்த மாட்டோம், காலணியும் அணிந்து செல்ல மாட்டோம், தகாத வார்த்தைகள் பேச மாட்டோம், அதுபோல்தான் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒரு கோவில் என்றார்.
கோவிலுக்கு சென்றால் நாம் பேணும் நல் ஒழுக்கத்தை பள்ளிகளிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அதேபோல் நமது பள்ளிகளின் பங்களிப்பை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து , நம் பிள்ளைகளின் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்தினால் பள்ளியின் வளர்ச்சி, நற்பெயர் உயர்வதுடன் நம் பிள்ளைகளின் வளர்ச்சியும் செம்மைப்படும்.
முக்கியமாக தவறாமல் நம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் எங்கும், எப்பொழுதும் மரியாதையுடன் நடக்க வேண்டும். பள்ளிப் பிள்ளைகளுக்கு குறிப்பாக ஆரம்பப் பள்ளிப் பிள்ளைகளுக்கு கைத்தொலைபேசியை வாங்கி கொடுக்காமல் இருக்க வேண்டும்.
இந்த கைத்தொலைபேசிகள், தொல்லை பேசிகள் ஆவதும் பல பிரச்சனைகளுக்கு மூலமாக அமைந்து விடுகிறது, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் முனைவர் குமரன் வேலு ராமசாமி.
அவரின் உரையை தொடர்ந்து நிறைவாக பள்ளியின் துணைத்தலைவர் திருமதி விக்டோரியா சூசை அவர்கள் பேசுகையில் இந்த வாகீசர் தமிழ் பள்ளி பெற்றோர்கள் ஓர் உறவுப்பாலத்தை மேம்படுத்தி வலுவடைய செய்ய வேண்டும்.
ஒரு கை தட்டினால் ஓசை வராது , அது போல் நம் பிள்ளைகளின் வாழ்வு மலர பெற்றோர்களும், தமிழ்ப் பள்ளிகளுடன், ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து செயல் பட்டால் நம் செல்வங்கள் நாட்டின் பொக்கிசமாக ஜொலிப்பார்கள். அதற்கான ஒத்துழைப்பை தலைமை ஆசிரியருக்கு வழங்க தனது முவுரையில் கேட்டுக்கொண்டார் அப்பள்ளியின் துணைத்தலைவர் திருமதி விக்டோரியா சூசை.