ஷா அலம் ஜூலை 25;- நமது சிலாங்கூர்- சித்தம் (SITHAM)- இந்திய தொழில் ஆர்வலர் மேம்பாடு மட்டுமின்றி இந்திய சமுதாயத்தின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட ஒரு நல்ல திட்டம்.
இன்றைய நமது சிலாங்கூர் அங்கத்தில் சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம். இந்த திட்டமும் ஐ-சீட் போலவே இந்திய சமூகத்தின் வசதி குறைந்த தரப்பினருக்கு குறுகிய கால தொழில் பயிற்சிகளையும் வர்த்தக உபகரணங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தலைமையில் இயங்கும் இந்த சித்தம் அமைப்பு பத்து லட்சம் வெள்ளி வருடாந்திர மானியத்தின் வாயிலாக நான்கு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
முதல் திட்டமாக விளங்கும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் வழி வர்த்தகத்தை விரிவாக்கும் நுணுக்கங்கள், ஹலால் சான்றிதழ் பெறும் முறை மற்றும் டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வர்த்தகத்தை விளம்பரப்படுத்தும் வழிகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இரண்டாவது திட்டமாக திறன் மற்றும் உற்பத்தி பயிற்சி விளங்குகிறது. இதில் சமையல் கலை, முக ஒப்பனை, மருதாணி இடுவது, மாலை தொடுப்பது குறித்து கற்றுத் தரப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இது போன்ற இரண்டு பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள தலா 5,000 வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்திய இளைஞர்கள் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் பகுதி நேரமாக இணைந்து அத்துறை சார்ந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்வதையும் அதன் மூலம் உபரி வருமானம் ஈட்டுவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் க்ரோ (GROW) எனப்படும் வர்த்தக வழிகாட்டு பயிற்சித் திட்டத்தையும் சித்தம் அமைப்பு நடத்தி நடத்தி வருகிறது.
வர்த்த உபகரணங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாக கொண்ட நான்காவது திட்டம் தற்போது சீரமைக்கப்பட்டு இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வசதி குறைந்தவர்களுக்கு அங்காடிக் கடைகள் அமைத்து அவர்களுக்கு வர்த்தக உபகரணங்களும் ஊராட்சி மன்ற லைசென்ஸ்களும் பெற்றுத் தருவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படுகிறது.