ELMEDIA STATEMENTNATIONAL

ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது, தவறாமல் வாக்களிக்க வாருங்கள்- அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கோரிக்கை

ஷா ஆலம், ஆக 12- பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல்
கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஏதுவாக மறவாமல் வாக்களிக்க வருமாறு
சிலாங்கூர் மக்களை தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர்
ஃபாஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய
விலை மதிப்புமிக்க சக்தியாக ஒவ்வொரு வாக்கும் விளங்குவதாக  கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமான அவர் சொன்னார்.

இன்றும் நாளையும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும். இவ்விரு
தினங்கள்தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றன. இறைவன்
அருளால் நாம் நாளை ஒற்றுமை அரசாங்கத்தை சிலாங்கூரில்
அமைப்போம். மக்கள் நலனை காப்பதில் தனது ஆற்றலை நிரூபித்த
கட்சியைத் தேர்ந்தெடுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இத்தேர்தல் குறித்து கருத்துரைத்த பாயா ஜெராஸ் தொகுதி
ஹராப்பான் வேட்பாளர் முகமது கைருடின் ஓத்மான், மக்களின் நலனைக்
காக்கும் திறன் இல்லாத தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள்
எதிர்காலத்தை பணயம் வைக்க வேண்டாம் என்று இளைஞர்களை
கேட்டுக் கொண்டார்.

தேர்தல் என்பது வெறும் விளையாட்டு அல்ல. பொழுது போக்காக முயற்சித்துப் பார்க்கும் களமும் அல்ல. ஐந்தாண்டு என்பது பாயா ஜெராஸ்  தொகுதியை தொடர்ந்து முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய  பயன்மிக்க ஒரு காலமாகும் என்றார் அவர்.

கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களைப் போல் அல்லாமல் நாம்
அனைவரும் ஒன்றிணைந்து நம்மிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு
நமது பாணியில் பாயா ஜெராஸ் தொகுதியை மேம்படுத்துவோம்
வாருங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Pengarang :