கிள்ளான், ஆக 21: மாநில அரசு ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ள 10 உறுப்பினர்களின் துறைகள் வரும் புதன் கிழமை நடைபெறும் முதல் ஆட்சிக்குழு கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படும்.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்களில் சிலர் புதிய முகங்கள் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
வரும் புதன்கிழமை நான் முதலாவது ஆட்சிக்குழு கூட்டத்தை நடத்துவேன். மதியம் 12.00 அல்லது 12.30 மணிக்கு அவர்களுக்கான துறைகளை அறிவிப்பேன் என்றார் அவர்.
துறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. முதலில் பதவியேற்பு நிகழ்வு நடக்கட்டும் இன்று இஸ்தானா ஆலம் ஷாவில் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
17வது சிலாங்கூர் மந்திரி புசாரின் பதவி உறுதி மொழி, இரகசிய காப்பு பிரமாணம் மற்றும் நியமனக் கடிதத்தில் கையெழுத்திடும் சடங்கு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதற்கிடையில், அண்மைய தேர்தலில் மாநில சட்டப் பேரவையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறத் தவறிய போதிலும் முதல் சோதனையில் பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று விட்டதாக அமிருடின் குறிப்பிட்டார்
எதிரணியுடன் ஒப்பிடும்போது எங்களுக்கு 12 இடங்கள் கூடுதலாக உள்ளன. இது ஒரு நல்ல தொடக்கம். எதிர்காலத்தில் அதை வலுப்படுத்த முடியும் என்றார் அவர்.