SELANGOR

தாமான் மஸ்னாவில் அடிப்படை வசதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண டாக்டர் குணராஜ் நடவடிக்கை

கிள்ளான், ஏப் 17- இங்குள்ள தாமான் மஸ்னா குடியிருப்பு பகுதி மக்கள்
எதிர்நோக்கி வரும் அடிப்படை வசதிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு
காண்பதற்கான நடவடிக்கையை செந்தோசோ சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முன்னெடுத்துள்ளார்.

தாமான் மஸ்னா குடியிருப்பு பகுதிக்கு நேற்று வருகை மேற்கொண்டு
குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்த அவர்,
இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காகக்
கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ பண்டார் மற்றும் சம்பந்தப்பட்ட
துறைகளுடன் அடுத்த இரு வாரங்களில் சந்திப்பு நடத்தப்படும் என்று
சொன்னார்.

இந்த வருகையின் போது வெள்ள நீர் சுத்திகரிப்பு குளத்தை சுத்தம்
செய்வது, நீர் இறைப்பு பம்ப்பில் ஏற்படும் பழுது மற்றும் அதனை
குறிப்பிட்ட கால அட்டவணையில் பராமரிப்பது, சுற்றுப்புற தூய்மை,
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் நிர்மாணிப்பு பணிகளை
துரிதப்படுத்துவது, கைவிடப்பட்ட பழைய வாகனங்கள் மற்றும் விபத்துகள்
ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் தெருநாய்கள் பெருக்கம் உள்ளிட்ட
பிரச்சனைகளை வட்டார மக்கள் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கள ஆய்வில் டாக்டர் குணராஜூடன் கிள்ளான் அரச மாநகர் மன்ற
உறுப்பினர்களான ரோய் ஞானேஸ்வரன், தங்கராஜா ஆகியோருடன்
மாநகர் மன்ற மற்றும் கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட்
மேனெஜ்மெண்ட் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Pengarang :