ஷா ஆலம், டிச 29- வெள்ள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்தது 30,000 குடும்பத்தினர் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இத்திட்டம் பெட்டாலிங் மாவட்டத்தில் நேற்று தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த உதவித் தொகை வழங்கும் திட்டம் இதர மாவட்டங்களுக்கும் கட்டங் கட்டமாக விரிவுபடுத்தப்படும். தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு நிதி வழங்கப்பட்டப் பின்னர் நிவாரண மையங்களுக்குச் செல்லாதவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
இன்று காலை ரேடியோ ஹோட் எஃப்.எம். வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். பொருள் சேதத்திற்கு உள்ளான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றத் தகவலையும் அமிருடின் வெளியிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசிடமிருந்து 1,000 வெள்ளி உதவித் தொகையை பெறுவர். மேலும் முஸ்லீம் குடும்பங்களுக்கு ஸக்கத் அறவாரியம் மூலம் 600 வெள்ளி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 10 கோடி வெள்ளி நிதியில் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை மாநில அரசு தொடக்கியது.
இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10,000 வெள்ளியும் உடமைகளை இழந்தவர்களுக்கு 1,000 வெள்ளியும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.