ஷா ஆலம், டிச 4- சிலாங்கூரில் முதன் முறையாக நடத்தப்படும் பியாஸ்தா பிளாட்பார்ம் சிலாங்கூர் விழா (பிளாட்ஸ்) தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் இனி வருடந்தோறும் நடத்தப்படும்.
இம்மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடத்தப்படும் இவ்விழா, வணிகர்களும் சில்லறை வர்த்தகர்களும் இலக்கவியல் தளத்தில் இணைவதை ஊக்குவிப்பதில் வெற்றி கண்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
நாம் பெரும் எண்ணிக்கையிலான தொழில் முனைவோர் சமூகத்தை உருவாக்கியுள்ளோம். மாநிலத்தின் வெற்றியை இது காட்டுகிறது. இத்தகைய திட்டங்கள் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு தன்முனைப்பை தரும் வகையில் அமையும் என்பதோடு அவர்களுக்காக மேலும் என்ன செய்ய முடியும் என பரிசீலிப்பதற்குரிய வாய்ப்பினையும் எங்களுக்கு ஏற்படுத்தும் என்றார் அவர்.
வணிகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொடர்பாளர்களாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும் மாநிலத்தில் தொழில் முனைவோரின் வெற்றிக்கு இதுவே ஆதாரம். யாரும் பின்தங்கி விடுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
தொழில் முனைவோர் குறுகிய வட்டத்தில் மட்டுமல்லாது விரிவான அளவில் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும் இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என்று ரோட்சியா சொன்னார்.
இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு சிலாங்கூர் தொழில் முனைவோர் விழாவில் பியெஸ்தா பிளாட்ஸ் நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.