ஷா ஆலம், ஜூன் 30:
சிலாங்கூர் மாநில மக்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையை இந்த ஆண்டு பெருநாள் விடுமுறைக் காலங்களிலும் பெறலாம் என்று மாநில முதலீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். இந்த இலவச சேவையை எப்போதும் போல பொது மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
” சிலாங்கூர் மாநிலம் முழுவதும், நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளிலும் மாநில மக்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறது. நோன்பு பெருநாளுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை , 11 ஊராட்சி மன்றங்களும் நிறைவான சேவையை வழங்கி வருகிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
கடந்த 2015-இல் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை மூன்று ஊராட்சி மன்றங்களில், முறையாக ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ), சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) மற்றும் கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த இலவச சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டு, அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே), காஜாங் நகராண்மை கழகம் (எம்பிகெஜெ), செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்), உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்), செப்பாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்பி), கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்), கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) மற்றும் சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம் (எம்டிஎஸ்பி) ஆகிய 8 ஊராட்சி மன்றங்களில் அமல்படுத்த பட்டுள்ளது என்று கூறினார்.
2016-வரை ஏறக்குறைய 5 மில்லியன் பயணிகள் இந்த இலவச சேவையை பயன்படுத்தியதாகவும் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் 1.2 மில்லியன் பயனீட்டாளர்கள் இலவச சேவையை பயன்படுத்தியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
#கேஜிஎஸ்