ஷா ஆலம், பிப் 20- ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச மினி பஸ் சேவைக்கான தடங்களை உறுதி செய்வது தொடர்பில் மாநில அரசு விரிவான ஆய்வினை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
குறைந்த பயணிகளை ஏற்றக்கூடிய இந்த மினி பஸ்களை புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தும் சாத்தியம் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
தற்போது இரண்டு மினி பஸ்கள் மட்டுமே சிப்பாங் பகுதியில் சேவையில் ஈடுபட்டுள்ளன. மினி பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பயணத் தடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களை விட மினி பஸ்களை பயன்படுத்துவதன் மூலம் செலவினத்தை குறைக்க முடியும் என்பதோடு கிராமப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரும் பயன் பெறுவதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.
கிராமப்புற சேவைக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பெரிய பஸ்களுக்கு பதிலாக மினி பஸ்கள் பயன்படுத்தப்படும் என்று இங் ஸீ ஹான் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூறியிருந்தார்.