ஷா ஆலம், மார்ச் 28- புனித ரமலான் மாதத்தில் இரவு வேளையிலும் இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள கிளினிக் செல்கேர் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அதன் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார். ரமலான் மாதத்தில் கோவிட்-19 பரிசோதனை பணிகளை தொடர்வதா அல்லது ஓய்வெடுப்பதா என்று நாம் முடிவெடுக்க வேண்டும். பணியைத் தொடர்வதாக இருந்தால் பொருத்தமான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஒருவேளை அது இரவு வேளையாகவும் இருக்கலாம் என்றார் அவர். சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் ஸ்ரீ கெம்பாங்கானில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இரவு நேரங்களில் கோவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் பட்சத்தில் நடப்பு சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகை காரணமாக சோதனைக்கு மக்கள் வருவார்களா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது என்றார்.