ஷா ஆலம், மே 3-தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சொந்தமாக கோவிட்- 19 தடுப்பூசி வாங்கும் சிலாங்கூர் அரசின் திட்டம் தாமதமடைந்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
சொந்தமாக தடுப்பூசியை வாங்குவதற்கு சிலாங்கூர் உண்மையிலே விரும்பம் கொண்டுள்ளதோடு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்திற்கு முதலில் தடுப்பூசியை வழங்கும் நிலையில் யாரும் இல்லை என்பதே தற்போதைய பிரச்னையாகும். இதே பிரச்னையையைத்தான் மத்திய அரசும் எதிர்நோக்கி வருகிறது என்றார் அவர்.
போதுமான அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால் தடுப்பூசி இயக்கத்தை நாட்டு மக்களுக்கு ஏககாலத்தில் மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முக நூள் வாயிலாக நடை பெற்ற “எதை வேண்டுமானாலும் கேளுங்கள்: கோவிட்-19” எனும் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.
பைசர் அல்லது அஸ்ட்ராஸேனேகா என தடுப்பூசிகளை தேர்ந்தெடுக்கும் போக்கை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் காரணத்தால் குறிப்பிட்ட தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும். தடுப்பூசித் திட்டத்தில் முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என வரிசைபடி மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.