ஷா ஆலம்,மே 9– மெலாவத்தி அரங்கின் நடப்பு நிலவரம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சியில் உண்மை இல்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
மெலாவத்தி அரங்கம் கோவிட்-19 நோயாளிகளின் உடல் நிலையைச் சோதிக்கும் மதிப்பீட்டு மையமாக செயல்பட்டு வருகிறதே தவிர அந்த காணொளியில் கூறப்பட்டதைப் போல் அது நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையம் கிடையாது என்றும் அவர் கூறினார்.
கோவிட்-19 நோயாளிகளின் உடல் நிலையை சோதிக்கும் மதிப்பீட்டு மையமாக மட்டுமே மெலாவத்தி அரங்கம் செயல்பட்டு வருகிறது. செர்டாங், மேப்ஸ் மையத்தைப் போல் இது தனிமைப்படுத்தும் மையம் அல்ல. மெலவாத்தி அரங்கில் எந்த நோயாளியும் இரவில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை என்றார் அவர்.
மெலாவத்தி அரங்கின் நடப்பு நிலவரத்தை விளக்கும் காணொளி ஒன்றையும் தனது முகநூல் வாயிலாக மந்திரி புசார் பகிர்ந்து கொண்டார்.
கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையத்தின் நடவடிக்கைகளைச் சித்தரிக்கும் 14 வினாடி காணொளியோடு இரண்டு நிமிட குரல் பதிவும் வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக பகிரப்பட்டு வந்தது.
அதிகமான கோவிட்-19 நோயாளிகள் தங்கியிருக்கும் மெலாவத்தி அரங்கின் காட்சி இதுவென்று அந்த குரல் பதிவில் நபர் ஒருவர் கூறியிருந்தார்.