ஷா ஆலம், ஜூலை 23- பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை கைபேசி வாயிலாக ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதே சமயம், தடுப்பூசியை செலுத்துவதற்கு முன்னர் சிரிஞ்ச் ஊசியை சம்பந்தப்பட்ட தாதி தடுப்பூசி பெறுவோரிடம் காட்ட வேண்டும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
மருத்துவப் பணியாளர் ஒருவர் தனக்கு காலியான சிரிஞ்ச் கொண்டு தடுப்பூசி செலுத்தியதாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணியை வீடியோவில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
தனக்கு தடுப்பூசி செலுத்தப்படும் காட்சியை பதிவு செய்த அந்நபர், அந்த காட்சியை மீண்டும் சோதித்த போது காலியான ஊசி தனக்கு செலுத்தப்பட்டதை அறிந்ததாக சினார் ஹரியான் ஏடு செய்தி வெளியிட்டிருந்தது.