கோலாலம்பூர், ஜூலை 29– பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களையில் தாக்கல் செய்தார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ மொகிடின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று அவை உறுப்பினர்கள் சார்பாக தாம் வலியுறுத்துவதாக அன்வார் தெரிவித்தார்.
அவசரகாலம் தொடர்பான அனைத்துச் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அவசர கதியில் அகற்றப்பட்டுள்ளதை அவை உறுப்பினர்கள் மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட முரண்பட்ட மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கை நீதி பரிபாலன முறையை மதிக்காத போக்கை காட்டுவதோடு நாட்டின் முதன்மை தலைவராக விளங்கும் மாமன்னரின் பொறுப்பு மற்றும் அதிகாரத்தை புறந்தள்ளும் வகையிலும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
டான்ஸ்ரீ மொகிடின் தவிர்த்து நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடன் ஹசான் மற்றும் தேசிய சட்டத்துறைத் தலைவர் டத்தோ அஸார் அஜிசான் ஆகியோரும் பதவி துறக்க வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.