கிள்ளான், ஆக 4– தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளவர்களின் வீடுகளுக்கு மருத்துவர்கள் நேரில் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை செந்சோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் முன்னெடுத்துள்ளார்.
கிள்ளான், செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருக்கும் கடும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இத்திட்ட அமலாக்கம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று விரைவில் அறிவிக்கப்படும். இம்மாதம் 10 அல்லது 11ஆம் தேதிகளில் இதனை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பணியாளர்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்வர். பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இங்குள்ள செக்சன் 19, டி பல்மா ஹோட்டலில் உள்ள செல்வேக்ஸ் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வருகைக்கான முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 300 பேருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது.