கோலாலம்பூர், செப் 21- வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் பி.டி.பி.ஆர். முறை மிதமான அளவே பயன் தருவதாக கல்வியமைச்சு கூறுகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது பி.டி.பி.ஆர். கல்வி முறையை மையமாக கொண்டு வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறை மீது இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டதாக நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் ஜூலை வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் அணுகுமுறை, வியூகம், பயன்படுத்தப்படும் செயலி மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அது கூறியது.
நகர்புறங்களில் 59.3 விழுக்காட்டு மாணவர்களும் புறநகர்ப் பகுதிகளில் 51.4 விழுக்காட்டு மாணவர்களும் இந்த பி.டி.பி.ஆர். முறையில் பங்கேற்றது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே சமயம் ஆர்.பி.டி. எனப்படும் வருடாந்திர கல்வித் திட்டத்தில் 46.2 விழுக்காட்டு நகர்ப்புற ஆசிரியர்களும் 39.1 விழுக்காட்டு புறநகர்ப் பகுதி ஆசிரியர்களும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளனர்.
இது தவிர, 51.2 விழுக்காட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் போது மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 48.9 விழுக்காட்டினர் ஆசிரியர்களுடன் வரையறைக்குட்பட்டு தொடர்பு கொள்ள வேண்டிய நிர்பந்தம் காரணமாக மனவுளைச்சல் ஏற்பட்டதாகவும் 55 விழுக்காட்டு மாணவர்கள் சக மாணவர்களுடன் கலந்துரையாட முடியாத காரணத்தால் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் 53.4 விழுக்காட்டினர் படிப்பில் போதுமான வழிகாட்டல் இல்லாததால் மனவுளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளனர்.