சுபாங், நவ 27- இங்கு நடைபெற்று வரும் சிலாங்கூர் வான் கண்காட்சி (எஸ்.ஏ.எஸ். 2021) இன்று நண்பகல் 12.00 மணி வரை 3,875 பார்வையாளர்களை ஈர்த்தது.
இன்றுடன் அக்கண்காட்சி முடிவடைவதற்குள் திட்டமிட்டபடி 5,000 வருகையாளர்களை ஈர்க்க முடியும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த கண்காட்சிக்கு 5,000 வருகையாளர்கள் வருகை புரிவர் என நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். இக்கண்காட்சிக்கு மக்கள் தொடர்ந்து வருவதால் இந்த இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஸ்கைபார்க் வட்டார வான் போக்குரத்து மையத்தில் சிலாங்கூர் வான் கண்காட்சியை முடித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கண்காட்சி வழி வரலாறு படைக்கப்பட்டது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பெருந்தொற்று பரவல் காரணமாக வான் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறை பின்னடைவிலிருந்து மீள்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என கருதுகிறோம் என்றார் அவர்.
இந்த வான் போக்குவரத்து கண்காட்சியை சிலாங்கூர் அரசின் ஆதரவில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம் நடத்துகிறது. மொத்தம் 43 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.