ஷா ஆலம், நவ 30- கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிக்கு வந்த மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 85 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.
நாடு முழுவதும் உள்ள 10,060 பள்ளிகளில் பயிலும் 43 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று கல்வி மூத்த அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
பள்ளிகள் மறுபடியும் திறக்கப்பட்டதை பெற்றோர்களும் மாணவர்களும் பொதுவாக வரவேற்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் மாணவர்களின் ஆற்றலை ஆசிரியர்கள் நேரடியாக மதிப்பிடுவதற்கும் பொருத்தமான கூடுதல் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று மக்களவையில் இன்று அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகளின் மேம்பாடு குறித்து கோல கிராய் உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்