ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 : நேற்று 15,942 சம்பவங்கள் பதிவு- 108 பேருக்கு கடும் பாதிப்பு

ஷா ஆலம், மார்ச் 31 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 15,941 ஆகப் பதிவானது. கடந்த நான்கு நாட்களாக நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை 20,000 த்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 83 ஆயிரத்து 359 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 7,474 பேர் முதல் கட்டப் பாதிப்பையும் 8,359 பேர் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ள வேளையில் 50 பேர் மூன்றாம் கட்ட பாதிப்பையும் 26 பேர் நான்காம் கட்டப் பாதிப்பையும் 32 பேர் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 108 நோயாளிகளில் 26 பேர் தடுப்பூசியை அறவே அல்லது முழுமையாகப் பெறாதவர்களாவர். மேலும் 45 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர். எஞ்சிய 37 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

நேற்று புதிதாக நோய் கண்டவர்களை விட அதிகமாக அதாவது 21,186 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக கூறிய அவர், இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 41 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 275 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட வேளையில் அவர்களில் 168 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :