கோம்பாக், அக் 2- பத்து கேவ்ஸ் தொகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 337 குடும்பங்கள் மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெறும் தகுதியைப் பெற்றுள்ளன.
பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் வாயிலாக எண்பது விழுக்காட்டு விண்ணப்பதாரர்கள் உதவித் தொகையைப் பெறத் தொடங்கி விட்டன என்று தொகுதிக்கான மந்திர புசாரின் அரசியல் செயலாளர் அப்துல் ரஹிம் காஸ்டி கூறினார்.
இவர்களில் பெரும்பாலோர் கிஸ் எனப்பம் அன்னையர் பரிவுத் திட்டத்தின் கீழ் உதவிப் பெற்றவர்களாவர் என்று அவர் சொன்னார். புதிய விண்ணப்பதாரர்களின் மனுக்களை விரிவாக பரிசீலிக்கும் அதேவேளையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் அல்லது கிராமத் தலைவரிடமிருந்து சான்றுக் கடிதத்தையும் இணைக்க வலியுறுத்துகிறோம் என்றார் அவர்.
இந்த உதவித் திட்டத்திற்கு உண்மையில் தகுதி உள்ளவர்களாகவும் மாதம் 2,000 வெள்ளிக்கும் கீழ் குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம் என அவர் சொன்னார்.
கடந்த ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் இடம்பெற்றுள்ள 44 உதவித் திட்டங்களில் இந்த பிங்காஸ் திட்டமும் ஒன்றாகும். பத்து கோடியே 80 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான இத்திட்டத்தின் வழி சுமார் 30,000 குடும்பங்கள் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.