ECONOMYMEDIA STATEMENT

காங்கிரிட் நடைபாதை, திடல் சீரமைப்பு பணிகளுக்கு சுபாங் ஜெயா தொகுதி வெ.100,000 ஒதுக்கீடு

சுபாங் ஜெயா, ஏப் 14- இங்குள்ள எஸ்.எஸ்.19 பகுதியில் காங்கிரிட் நடைபாதை அமைப்பதற்கும் பொழுதுபோக்கு பூங்காவை சமப்படுத்துவதற்கும் சுபாங் ஜெயா தொகுதி 100,000 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

சிலாங்கூர்  பென்யாயாங் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட 400,000 வெள்ளியில் ஒரு பகுதி இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் ஸீ மேய் கூறினார்.

மழை காலங்களில் இந்த திடல் சேறும் சகதியுமாக இருப்பது தொடர்பில்  பொது மக்களிடமிருந்து தாங்கள் புகார்களைப் பெற்று வந்ததாக  அவர் சொன்னார்.

திடலைப் பயன்படுத்த முடியாத காரணத்தால் பொது மக்கள் சாலையோரங்களில் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். இங்கு வருவோரில் பெரும்பாலோர் முதியவர்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்த திடலை சீரமைக்க முடிவு  செய்தோம் என அவர் தெரிவித்தார்.

சுமார் 280 மீட்டர் நீளம் கொண்ட இந்த தடத்தை நிர்மாணிக்கும் பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் முற்றுப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

காங்கிரிட் நடைபாதை அமைக்கும் பணிகள் தவிர்த்து இங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவை சமப்படுத்தி தரம் உயர்த்தும் பணியையும் தாங்கள் மேற்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.


Pengarang :