அலோர்ஸ்டார், ஏப் 29- நாட்டில் காணப்படும் பரம ஏழ்மை நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒற்றுமை அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எண்ணெய், எரிவாயு போன்ற வளங்கள் நிறைந்த மலேசியா போன்ற நாட்டில் இத்தகைய பரம ஏழ்மை நிலை இருக்கக் கூடாது என்று அவர் சொன்னார்.
சபா, சரவா, கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் அதிகமாக பரம ஏழைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு விதிவிலக்குமின்றி பரம ஏழைகள் பிரச்சனை மிகவும் சிறப்பான முறையில் கையாளப்படும். கெடா மாநிலத்தைப் பொறுத்த வரை பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாநிலத்தில் நிலவும் பரம ஏழ்மை நிலைக்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நோக்கத்திற்காக அரசு இயந்திரங்களை முழுவீச்சில் செயல்படுத்தும்படி மத்திய, மாநில அரசுகளையும் ஊராட்சி மன்றங்களையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். எண்ணெய், எரிவாயு, செம்பனை மற்றும் பல்வேறு தொழில்துறைகள் கொண்ட நாட்டில் பரம ஏழைகள் இன்னும் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
மாட்சிமை தங்கிய கெடா சுல்தான் அல்-அமினுள் கரிம் சுல்தான் சலாஹூடின் சுல்தான் பட்லி ஷா பங்கு கொண்ட மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றும் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் மாநிலங்களில் கெடாவும் ஒன்றாகும் எனக் கூறிய அவர், முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு அதாவது 160 கோடி வெள்ளியை இவ்வாண்டு மத்திய அரசு இம்மாநிலத்திற்கு வழங்குகிறது என்றார்.