ஷா ஆலம், டிச 26- புதிய ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியை (கே.எஸ்.எஸ்.ஏ.) உருவாக்குவதற்கு ஏதுவாக தற்போதுள்ள ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிப்பதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்த அரங்கை இடிப்பதற்கான அனுமதி இம்மாதம் 22ஆம் தேதி வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது எக்ஸ் பதிவில் கூறினார்.
இப்போதுதான் (டிசம்பர் 22ஆம் தேதி) அந்த அனுமதி எங்களுக்கு கிடைத்தது என்று புதிய விளையாட்டுத் தொகுதியின் ஆக சமீபத்திய மேம்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வரும் ஷா ஆலம் விளையாட்டரங்கிற்கு பதிலாக புதிய விளையாட்டுத் தொகுதியை மாநில அரசு நிர்மாணிக்கவிருக்கிறது.
ஷா ஆலம், செக்சன் 13இல் அமைந்துள்ள இந்த விளையாட்டரங்கம் கடந்த 2013 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்டது. அந்த இயற்கைப் பேரிடர்களில் திடல், மின் விநியோக அறை, மின் கம்பி இணைப்பு முறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றோடு அரங்கின் பாதுகாப்பு அம்சத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமான திட்டமிடல் அனுமதிக்கான விண்ணப்பம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள வேளையில் மூன்று கோடி முதல் ஐந்து கோடி வெள்ளி வரை செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் விளையாட்டங்கை உடைக்கும் பணி இம்மாதம் தொடங்கப்படும் என்று கடந்த நவம்பர் 21ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாத த்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அமிருடின் கூறியிருந்தார்.