கோலாலம்பூர், ஏப் 13- வைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் நாட்டிலுள்ள சீக்கியர்கள் மற்றும் தமிழர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார ராஜா ஜரித் சோஃபியா தம்பதியர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சகிப்புத் தன்மையும் பரஸ்பர மரியாதையும் நாட்டின் ஒற்றுமைக்கான தூண்களாக எப்போதும் விளங்கி வருகின்றன என்று பேரரசர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
நான் ஏற்கனவே வலியுறுத்தியது போல் பன்முகக் கலாச்சார ஒற்றுமை என்னைப் பொறுத்த வரை பொருள் பொதிந்த பரிசாகும். நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்கு இன, சமய வேறுபாடுகளை கடந்த நல்லிணக்கமும் ஒற்றுமையும் மிகவும் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.
வைசாகி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு அப் பெருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வர தாம் வாழ்த்துவதாகவும் பேரரசர் தெரிவித்தார்.
சீக்கியர்களின் வழக்கப்படி அறுவடைப் பருவத்தின் தொடக்கத்தை வைசாகி குறிக்கிறது. தமிழர் நாட்காட்டியின் முதல் நாள் சித்திரைப் புத்தாண்டாக க் கொண்டாடப்படுகிறது.