ஷா ஆலம், செப் 28- கிள்ளான் மாவட்டத்தில் நேற்று முதல் ஏற்பட்டு வரும் கடல் பெருக்கு காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காலை 7.30 மணி முதல் ஜாலான் லண்டாசானில் உள்ள கம்போங் புக்கிட் கூடா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக கிள்ளான் மாவட்ட நில மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.
தாமான் கம்போங் குவாந்தானில் உள்ள லோரோங் ஹீஜாவ், ஜாலான் பூத்தே மற்றும் ஜாலான் புக்கிட் கூடா தொடங்கி ஜாலான் பத்து தீகா லாமா வரையிலானப் பகுதி ஆகியவையும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
இந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல்குழு தற்காலிக நிவாரண மையங்களை இன்று காலை திறந்துள்ளது.
கடந்த புதன்கிழமை கடல் அலைகள் 5.4 மீட்டர் வரை உயர்ந்த வேளையில் இன்று 5.3 மீட்டர் வரை அலைன மேல் எழும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தாமான் செலாட் டாமாய், தாமான் தெலுக் கெடோங் இண்டா, தோக் மூடா மீனவர் படகுத் துறை ஆகிய பகுதிகளை அதிகாரிகள் அணுக்கமாக கண்காணித்து வருகின்றனர்.
இது தவிர, கோல லங்காட் மாவட்டத்தின் பந்தாய் கெலானாங், பந்தாய் பாரு மோரிப், பந்தாய் மோரிப், பந்தாய் பத்து லாவுட், பந்தாய் சூனாங், தஞ்சோங் சிப்பாட் படகுத் துறை ஆகிய பகுதிகளும் கண்காணிக்கப்படுகின்றன.