ஷா ஆலம், ஜூலை 8- கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக ஷா ஆலம் மருத்துவனையை தகுதி மாற்றம் செய்வது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலத்து வருகிறது.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆற்றலை அதிகரிப்பதற்கு அமைச்சு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக கோலாலம்பூர் மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை, கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை ஆகியவற்றில் கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, சாதாரண வார்டுகளில் உள்ள கட்டில்களை தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களாக மாற்றுவது, பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்களில் கட்டில்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
மருத்துவ கல்வி மருத்துவமனையாக செயல்படும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் மற்றும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றை கோவிட்-19 சிகிச்சை மையங்களாக மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.