ஷா ஆலம், ஆக 13- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் இழந்த தரப்பினருக்கு உதவும் வகையில் தொழிலாளர் ஆக்கத்திறனளிப்புத் துறையை மாநில அரசு மேலும் வலுப்படுத்தும்.
அண்மைய காலமாக அதிகரிப்பைக் கண்டு வரும் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு உதவும் வகையில் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று சமூக மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொழிலாளர் ஆக்கத்திறனளிப்புத் துறை திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் மறுஆய்வு செய்யவேண்டியுள்ளது. சிலாங்கூரில் மேலும் அதிகமானோர் வேலை இழக்கும் அல்லது வருமான பாதிப்பை எதிர் நோக்கும் சாத்தியம் உள்ளதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இத்தகைய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாவிட்டால் வேலை இழந்தோர் மத்தியில் வருமான ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு தற்கொலை வரை செல்லக்கூடிய அபாயம் உள்ளது என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
பொது மக்களிடையே பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஏதுவாக முதலாளிகள் வெளிநாட்டினருக்குப் பதிலாக உள்நாட்டினரை வேலைக்கு எடுப்பத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உள்நாட்டினரை வேலைக்கு அமர்த்தும் பட்சத்தில் நாம் அந்நிய நாட்டிரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்நிய நாட்டினரின் பொருளாதாரம் நமது பொருளாதாரத்தை விட சிறப்பாக இருப்பதைக் காண நான் விரும்பவில்லை என்றார் அவர்.