ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

பெருந்தொற்று பாதிப்பின் எதிரொலி- சிலாங்கூரில் 117 பேர் தற்கொலை

ஷா ஆலம், ஆக 31- கோவிட்-19 இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிலாங்கூரில் 117 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அக்காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த 468 தற்கொலைச் சம்பவங்களில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டில் நாடு முழுவதும் 631 தற்கொலைச் சம்பவங்களும் அதற்கு முந்தைய ஆண்டில் 609 சம்பவங்களும் பதிவானதை காவல் துறையின் தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 நம்மை கடுமையாக சோதித்து வருகிறது. இந்நோய் காரணமாக பொதுமக்களுக்கு மனோரீதியில் கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை காட்டுகிறது என்றார் அவர்.

நேற்றிரவு “சேஹாட்“ எனப்படும் சிலாங்கூர் மன நல ஆரோக்கியத் திட்டத்தை இயங்கலை வாயிலாக தொடக்கி வைத்த போது மந்திரி புசார் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் மக்கள் மத்தியில் சுகாதார பாதிப்பு அதிகரித்து வருவதை நிபுணர்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.  கடந்தாண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை சுகாதார அமைச்சின் கோவிட்-19 மனோவியல் உதவி அழைப்புச் சேவை மையம் 43,078 பேரிடமிருந்து அழைப்பை பெற்றுள்ளது இதற்கு தக்க சான்றாகும் என்றார் அவர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 18 வரை மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்ட போது கடந்தாண்டை விட மூன்று மடங்கு அதிகமாக அதாவது 122,328 அழைப்புகளை அந்த மையம் பெற்றதாக அவர் மேலும் கூறினார்.

 


Pengarang :