ECONOMYMEDIA STATEMENTPBT

குற்றப்பதிவுகளுக்கு 70 விழுக்காடு வரை கழிவு- ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது

ஷா ஆலம், அக் 18- “நீங்களும் எம்.பி.எஸ்.ஏ.“வும் தினத்தை முன்னிட்டு குற்றப்பதிவுகளுக்கு 70 விழுக்காடு வரையிலான அபராதக் கழிவை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது. இக்கட்டணக் கழிவுச் சலுகை இங்குள்ள பிளாசா ஷா ஆலமில் வரும் சனிக்கிழமை வழங்கப்படும்.

அன்றைய தினம் காலை 11.00 மணி முதல்  மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தங்கள் அபராதத் தொகையை செலுத்தலாம் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

அக்டோபர் மாதம் முழுவதும் கார் நிறுத்தமிடக் குற்றங்களுக்கு பத்து வெள்ளி அபராதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட இதர குற்றங்கள் தொடர்பான சம்மன்களுக்கு 70 விழுக்காடு வரையிலான கழிவும் வழங்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் மக்கள் ஷா ஆலம் மாநகர் மன்ற அதிகாரிகளைச் சந்தித்து புகார்களையும் குறைகளையும் தெரிவிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் எம்.பி.எஸ்.ஏ.வும் நீங்களும் என்ற இந்த இயக்கம் நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வழங்கும் சேவையின் தரத்தை தொடர்ந்து உயர்த்துவதற்கு மாநகர் மன்றம் கொண்டுள்ள கடப்பாட்டின் ஒரு பகுதியாகவும் இத்திட்டம் அமைகிறது என்றார் அவர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதிப்பீட்டு வரியைச் சரிபார்ப்பது மற்றும் செலுத்துவது, குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையைச் செலுத்துவது, உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

 


Pengarang :