ஷா ஆலம், ஜன 5- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோல லங்காட் மற்றும் சிப்பாங்கை சேர்ந்த சுமார் 700 குடும்பங்கள் சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றன.
புக்கிட் சங்காங்கை சேர்ந்த 277 குடும்பங்களும் டிங்கில் பகுதியைச் சேர்ந்த 400 குடும்பங்களும் இந்த உதவித் தொகையைப் பெற்றதாக புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.
இந்த பேரிடரில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய நிதி வழங்கும் நிகழ்வு சீராக நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் அதிக பாரங்களை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு பாரத்தை பூர்த்தி செய்தால் போதுமானது. நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.
இதுவரை 8,219 பேர் மாநில அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதியாக தலா 1,000 வெள்ளியைப் பெற்றுள்ளனர். இந்த நிதியை வழங்குவதற்காக சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.