ECONOMYMEDIA STATEMENTPBT

76  மாணவர்களுக்கு கோவிட்-19: மலாக்காவிலுள்ள தொழில் திறன் கல்லூரியை மூட உத்தரவு

ஷா ஆலம், ஜன 19- மலாக்காவிலுள்ள தொழில் திறன் கல்லூரி ஒன்றில் பயிலும் 76 மாணவர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கல்லூரியை ஏழு நாட்களுக்கு மூட உத்தரவிட்டப்பட்டது. இம்மாதம் 14 ஆம் தேதி முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை அக்கல்லூரியை மூட மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்கல்லூரியைச் சேர்ந்த பெண் மாணவி ஒருவரிடம் முதன் முறையாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார மற்றும் போதைப் பொருள் தடுப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது அகமால் சாலே கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 71 ஆண்கள் என்றும் எஞ்சியோர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் மூன்று மாணவர்களின் கோவிட்-19 சோதனை முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்லூரியின் தங்கும் விடுதிகளில் மாணவர்கள் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிக்காததே இந்நோய் பரவலுக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :