ECONOMYSELANGORTOURISM

ஐரோப்பிய நாடுகளில் சிலாங்கூரை பிரபலப்படுத்த டூரிசம் சிலாங்கூர் நடவடிக்கை

ஷா ஆலம், செப் 19- ரஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கும் அந்நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக சிலாங்கூர் அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான டூரிசம் சிலாங்கூர் அவ்விரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 11 முதல் 20 வரை மேற்கொள்ளப்படும் இந்த பயணத்தின் போது மாநில பேராளர் குழுவினர் மாஸ்கோ, தாஷ்காந்த், அல்மித்தி, இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்கு வருகை புரிவர் என டூரிசம் சிலாங்கூர் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் தலைமையிலான இந்த பேராளர் குழுவில் டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமதுவும் இடம் பெற்றுள்ளார். இந்த பயணத்தின் போது “அற்புத சிலாங்கூர், என்னை எங்கும் அழைத்துச் செல்லுங்கள்“ எனும் சுற்றுலா ஊக்குவிப்பு இயக்கத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவர்.

சிலாங்கூருக்கு வருகை புரியும் ஐரோப்பிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டில் 13 விழுக்காடு (231,914) உயர்வு கண்டது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குரிய கணிசமான முயற்சியாக அல்லது திருப்பு முனையாக அற்புத சிலாங்கூர் திட்டம் அமைந்துள்ளதாக ஹீ லோய் சியான் தெரிவித்தார். சிலாங்கூர் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய சுற்றுலா ஈர்ப்புகளை வழங்குகிறது. சூழியல் சுற்றுலா, தீம் பார்க், கலாசார மற்றும் பாரம்பரிய இடங்கள், ஷாப்பிங் செய்வதற்குரிய அற்புத இடங்கள், பொழுது போக்கு பூங்காக்களும் அதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

சன்வே லாகூன் தீம் பார்க், கம்போங் குவாந்தான் மின் மினிப்பூச்சி சரணாலயம், மா மெரி கலாசார கிராமம் மற்றும் அவானி சிப்பாங் கோல்ட் கோஸ்ட் ரிசோர்ட் ஆகியவை அவற்றில் சிலவாகும் என்றார் அவர்.


Pengarang :