ஷா ஆலம், ஏப் 24- இன்று தொடங்கி வரும் செவ்வாய்க்கிழமை வரை இயங்கலை வாயிலாக நடைபெறும் இல்லத்தரசிகள் தயாரிப்பு பொருள் கண்காட்சியில் பங்கேற்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இயங்கலை வாயிலாக பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை பொதுமக்கள் பெற முடியும்.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள 100 கடைகளில் மகளிரின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு கைவினைப்பொருள்கள் இடம் பெற்றுள்ளதாக மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
கைப்பேசி வாயிலாக பங்கேற்பதற்குரிய வாயிப்பினை பொது மக்களுக்கு வழங்கும் வகையில் இயங்கலை வழி இத்தகைய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும் என்றார் அவர்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள மகளிர் தங்களின் உற்பத்தி பொருள்களை சந்தைப் படுத்துவதற்கு இந்த கண்காட்சி சிறந்த தளமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகளிருக்கு குறிப்பாக பொருளாதார ரீதியில் சிரத்தை எதிர்நோக்குவோருக்கு உதவும் வகையில் மாநில அரசு முன்னெடுத்துள்ள திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் மேலும் சொன்னார்.